வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 220-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் படுகாயமடைந்த 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை தாண்டி ஈரான் அனுப்பிய ஏவுகணைகள் டெல்-அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தின.
அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்-க்கு பணியாற்றிய இஸ்மாயில் ஃபக்ரி என்பவருக்கான தூக்கு தண்டனையையும் ஈரான் நிறைவேற்றியது. இந்நிலையில் ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளிடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது அமெரிக்கா மூலம் போர்நிறுத்தம் குறித்து இஸ்ரேலிடம் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஈரான் வாக்குறுதி அளித்தால் மட்டுமே போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.