திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் ஆய்வாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோளப்பாடியூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது காவல் ஆய்வாளர் கண்ணன் என்பவர், ஒரு தரப்பினருக்குச் சாதகமாகச் செயல்பட்டு ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காவல் ஆய்வாளர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மற்றொரு தரப்பினர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.