அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார்.
அப்போது, அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அரசாணையின்படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
இதனை கேட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.