காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் காவலர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காவல்துறைக்கான பதவி உயர்வுக்கான காலத்தை குறைக்கிறேன் என்ற பெயரில் புதிய அரசாணை பிறப்பித்து, 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவலர்களுக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடையாது என அறிவாலயம் அரசு மேலும் வதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்த காவல்துறையில் பணி உயர்வு பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியை, நெடுங்காலமாக கிடப்பில் போட்டு காலந்தாழ்த்தி விட்டு தற்போது அரசாணை பிறப்பிக்க காரணம், இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வருவதனாலா? அல்லது 37,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் ஏமாற்றி செலவைக் குறைக்கலாம் என்ற எண்ணமா? என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் திசை எட்டும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கின் சுவடு தேய்ந்து வரும் நிலையில், இப்படி காவலர்களின் பணி நியமன ஆண்டை கருத்தில் கொண்டு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டினால், காவலர்களின் பணித்திறன் பாதிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.