ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கு தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு, 2022ஆம் ஆண்டு கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையது என்றும், தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இஷ்ரத், சையத் அப்துர் ரஹ்மான், முகமது ஹுசைன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைதான 4 பேரும் கோவை அரபிக் கல்லூரி நிறுவனர் ஜமீல் பாஷாவால் தீவிரவாத சித்தாந்த கொள்கைகளை ஏற்று, இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.