ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கைதான கல்லூரி முதல்வர் உட்பட 4 பேரை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு கோவை உக்கடத்தில் நடைபெற்ற கார் வெடிவிபத்து தொடர்பாக குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபி கல்லூரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பான ஆவணங்கள்
கிடைத்தன. மேலும் மாணவர்களை மூளைச்சலவை செய்து அந்த அமைப்பில் சேர்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அரபிக் கல்லூரியின் முதல்வர் அகமது அலி, ஊழியர் ஜவகர் சாதிக் உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.