விபூதியை அழித்து விட்டு செல்பி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நெற்றியில் பூசிய விபூதியை கோவில் வளாகத்திற்குள்ளேயே அழிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொண்டர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக விபூதியை அழித்ததாக விளக்கம் சொல்கின்றனர். முருகப்பெருமானின் அருட் பிரசாதமான விபூதி, இவர்களுக்கு அழகை குறைக்கும் பொருளாகத் தெரிகிறது. இதுபோன்ற போலி கபடதாரிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி அபகரிக்கும் கும்பலுக்கு எதிராக இந்துக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இவர்களோ, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவினரும் அவர்களின் கூட்டணி கட்சியான விசிக-வும் செய்து வருவது மோசடி அரசியல். இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து பயந்து போன இவர்கள், தற்போது இந்து மத நம்பிக்கையில் ஆர்வமுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கபட நாடகத்திற்காகத் தான் திருமாவளவன் அவர்களும் திருப்பரங்குன்றம் சென்றுள்ளார். அரிதாரம் பூசி நடிப்பதைப் போன்று கோவிலுக்கு சென்று விபூதி பூசிக் கொண்டு, அதை கோவில் வளகாத்திலேயே அழித்துள்ளார். இவர்களுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியும் பாடம் புகட்டுவார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.