திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வது, கடுமையான கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதி எண் 389ல், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, மொத்தம் 20 ஆண்டுகளில் எஸ்எஸ்ஐ பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியிருந்ததை, நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தற்போது இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வரவிருப்பதால், குழப்பமான ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது திமுக அரசு என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அரசாணையின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவல்துறையினருக்கு, எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்கு, மொத்தம் 23 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும், 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மொத்தம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தவா நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்வி, காவல்துறையிடையே எழுந்துள்ளது. இந்தத் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததைப் போல, காவல்துறையினரின் மொத்த பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மொத்தம் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், இன்னும் தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்எஸ்ஐ பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.