பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரைச் சந்தித்ததில் பெருமை அடைவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அசிம் முனீருக்கு ட்ரம்ப் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? இந்த சந்திப்பின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கெனவே, பாகிஸ்தானின் அதிபராகவும் இருந்த ராணுவத் தளபதிகள் அயூப் கான், ஜியா உல் ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப், ஆகியோருக்கு வெள்ளை மாளிகையில் மதிய விருந்து அளிக்கப் பட்டுள்ளது. இப்போது,நாட்டின் தலைவராக இல்லாத நிலையிலும், பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதியைச் அமெரிக்க அதிபர் சந்தித்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கக் கனடாவுக்கு பிரதமர் மோடி சென்றடைவதற்கு முன்பே, மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவசர அவசரமாகத் தனது பயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை சந்திப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் ட்ரம்ப் பேசியுள்ளார். பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த மத்தியஸ்தையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்றும் ட்ரம்பிடம் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணு ஆயுதப் போரைத்தடுத்து நிறுத்திய காரணத்துக்காக அதிபர் ட்ரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று அசிம் முனீர் கூறியதையடுத்து, ட்ரம்ப் அவரை அழைத்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த மதிய விருந்துக்குப் பின்,செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், அசிம் முனீருடன் ஈரான் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். மேலும் பல விஷயங்களில் அசிம் முனீர் தன்னுடன் உடன்பட்டதாகக் கூறிய ட்ரம்ப், அதுகுறித்த மேலதிக விவரங்களை விரிவாகத் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்துள்ள பாகிஸ்தான், இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் மேற்காசியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
ஒரு புறம், இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருகிறது அமெரிக்கா. இன்னொரு புறம் அணுசக்தி உடன்படிக்கைக்கு கட்டாயப் படுத்திய அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், ட்ரம்ப் -அசிம் முனீர் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீனாவுடனான தனது உறவை மேம்படுத்தியுள்ள இந்தியா, சர்வதேச நாடுகளுடன் நல்லுறவைப் பேணிவருகிறது. இந்தியாவை நட்பு நாடு என்றும், பிரதமர் மோடியை நண்பர் என்றும் கூறும் ட்ரம்ப், பாகிஸ்தான் மீதும் பாசத்தைக் காட்டத் தயாராகியுள்ளார்.
புதினுடன் கை கோர்த்து, ரஷ்யாவை சீனாவின் உறவில் இருந்து விலக்க ட்ரம்ப் முயற்சி செய்தது போலவே, அசிம் முனீருக்கு மதிய விருந்து கொடுத்து, பாகிஸ்தானை சீனாவிலிருந்து விலக்க முயற்சி செய்கிறார் ட்ரம்ப். மேலும் பலுசிஸ்தானின் இயற்கை கனிமங்களின் மீதும் அமெரிக்கா உரிமை கொண்டாட விரும்புகிறது.
பாகிஸ்தானுக்கு மொத்தம் 18 பில்லியனுக்கும் அதிகமான நிதி மற்றும் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பெரும்பாலான நிதியுதவி, பாகிஸ்தானின் இராணுவத் தளபதிகளுக்கும், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் திருப்பி விடப்படுகிறது. அமெரிக்காவின் உதவியால் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஏற்றுமதி செய்து வருகிறது.
உலகில் எங்குப் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானில் இருந்துதான் தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, அல்கொய்தா தலைவரான பயங்கரவாதியும் அமெரிக்க இரட்டை கோபுரதத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் இராணுவ மையத்துக்கு அடுத்த வீட்டில்தான் நீண்டகாலமாக வசித்து வந்ததைக் கூறலாம்.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’ அமெரிக்கா தனது சொந்த அனுபவத்தை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு உதவுவது, சொந்த செலவில் சூனியம் வைப்பது போல என்று சொல்லலாம். பாகிஸ்தானியர்களைத் தங்கள் நாட்டில் வரவேற்று ஆதரவு அளித்த எந்தவொரு நாடும் மோசமான விளைவுகளை ச் சந்திக்காமலிருந்ததில்லை. அதன் சமீபத்திய எடுத்துக்காட்டு, இங்கிலாந்தில் பாகிஸ்தானியர்கள் அரங்கேற்றிய பாலியல் குற்றங்கள் ஆகும்.
அதிபுத்திசாலித் தனம் என்ற பெயரில்,பாகிஸ்தான் பற்றிய புரிதல் இல்லாமல், அதிபர் ட்ரம்ப் அசிம் முனீருக்கு பால் வார்த்திருக்கிறார் என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளது.