கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்பியதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, மருத்துவமனைக்கு வந்த அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்ததாக கூறியுள்ளனர்.
4 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தால் ஜிபே மூலம் பணத்தைத் திருப்பி அனுப்பி வைப்பதாககூறி சக்திவேலிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளனர். ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாகக் கூறி தங்களது செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்துச் சென்றுள்ளனர்.
தமது வங்கி கணக்கு பணம் வராததை அறிந்த சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட தம்பதியை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் பகுதியில் தங்கியிருந்த முகமது ரிஸ்வான், அவரது மனைவி ஷர்மிளா பானு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 112 பேரிடம் ஜிபே மூலம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காதல் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.