சன் குழுமப் பங்குகள் தொடர்பாகக் கலாநிதி மாறன் உட்பட எட்டு பேருக்குத் தயாநிதி மாறன் அனுப்பியிருக்கும் நோட்டீஸால் சன் குழுமம் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சகோதர யுத்தத்திற்குக் காரணமான முறைகேடுகள் மற்றும் மோசடி புகார்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சன் குழுமத்தின் பங்கு நடைமுறையை 2003ம் ஆண்டு அசல் ஆவணத்தின் படி மீண்டும் மாற்ற வேண்டும் எனக்கூறி கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி உட்பட 8 பேருக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துக்களைத் தனிப்பட்ட ஆதாயத்திற்காகக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு திட்டம் தீட்டி சதி செய்திருப்பதாகக் கலாநிதி மாறன் மீது தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார். குடும்பத்தின் சூழலைச் சாதகமாக பயன்படுத்தி, குறிப்பாக முரசொலி மாறன் மரணப் படுக்கையிலிருந்த போது சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் மரணத்திற்குப் பின், உரிய ஆவணங்கள் இன்றி தாய் மல்லிகா மாறன் பெயருக்குச் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாகவும், இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு முன்பே சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தயாநிதிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவே பெரும்பாலான நிறுவனப் பங்குகளைக் கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றிக் கொள்ள உதவியாக அமைந்ததாகவும் அவர் அந்த நோட்டீஸில் கூறியுள்ளார். செப்டம்பர் 2003ல் 12 லட்சம் பங்குகள் சட்டவிரோதமாக, நம்பிக்கைத் துரோகம் செய்து மாற்றப்பட்டதாகவும், சன் டிவியின் 60 சதவிகித பங்குகள், நிறுவனத்தின் மற்ற பங்கு தாரர்களின் ஆலோசனையோ ஒப்புதலோ இன்றி கலாநிதி பெயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சன் டிவி நிறுவனத்தின் நிதி நிலைமை வலிமையாக இருந்ததைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையாளராகக் கலாநிதி மாறியதால் குடும்பத்தின் பங்கு 50 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் இவை தீவிர குற்றங்கள் எனக்கூறியிருக்கும் தயாநிதி மாறன் முன்கூட்டியே 12 லட்சம் பங்குகளைத் தன்வசப்படுத்திவிட்டதாகவும் கலாநிதி மாறன் மீது குற்றம் சாட்டியுள்ளார். அந்த 12 லட்சம் பங்குகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்த நிலையில் அதில் மட்டும் 3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருப்பதாகவும், இது தவிரப் பங்குகள் மீதான டிவிடெண்ட் வாயிலாக 2023 ஆம் ஆண்டு வரை 5 ஆயிரத்து 926 கோடி ரூபாயும், 2024 ஆம் ஆண்டில் 455 கோடி ரூபாயும் மோசடி நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சன் டிவி புதிய பங்கு வெளியிடுவதற்கு முன்பாக தயாளு அம்மாளுக்கு இருந்த பங்குகள் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட பின் அதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்ததாகவும், மல்லிகா மாறனுக்கு டிவிடெண்டாக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக பொய் கூறியிருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மோசடி செயல்களின் மூலம் கிடைத்த தொகையின் மூலம் சன் டைரக்ட், கல் ரேடியோஸ், கல் ஏர்வேஸ், கல் பப்ளிகேசன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், சன் பிக்சர்ஸ், பிரிட்டனில் கிரிக்கெட் அணிகள், ஸ்பைஸ் ஜெட் முதலீடு என ஏராளமான சொத்துக்கள் வாங்கியதையும் தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, 2003 ஆம் ஆண்டுக்கு முந்தைய பங்குதாரர் நடைமுறையை மறு உருவாக்கம் செய்வதோடு, முரசொலி மாறனின் வாரிசுதாரர்கள், தயாளு அம்மாள் ஆகியோர் சொத்துக்களின் உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் எனவும் தயாநிதி மாறன் கோரியுள்ளார் 2003 ஆம் ஆண்டு சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணப்பலன்களான டிவிடெண்ட் சொத்துக்கள், வருமானம் அனைத்தையும் முரசொலி மாறன் வாரிசுதாரர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருக்கும் தயாநிதி மாறன், இதனைச் செய்யத் தவறினால் சிவில், கிரிமினல், கண்காணிப்பு அமைப்புகள், அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தயாநிதி மற்றும் கலாநிதி மாறனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த சகோதர யுத்தத்தால் சன் குழுமங்கள் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அதன் மற்ற பங்குதாரர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.