ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மேற்கொள்ளும் அணு சக்தி திட்டத்தைக் கைவிடக்கோரி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
இதற்குப் பதில் தாக்குதலை ஈரான் கொடுத்து வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் போர்டோவ், நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய பகுதிகளில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது.
ஈரானைத் தாக்குவது குறித்து 2 வாரங்களில் முடிவு செய்யப்படும் என அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி உள்ளதாகவும், தாக்குதல் நடத்திய அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார். மேலும், போர் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.