மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாகக் கந்த சஷ்டி கவச பாராயணம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், மதமாற்றத்தைத் தடுப்போம், இந்துக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழி வாசிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாகக் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யப்பட்டது. அப்போது மேடையிலிருந்த தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள் இருக்கையில் இருந்து எழுந்து தரையில் அமர்ந்து கந்த சஷ்டி கவச பாராயணம் செய்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடி பக்தி பரவசத்தில் திளைத்தனர்.
முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக அறுபடை முருகனுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. கயிலாய வாத்தியங்கள் முழங்க அறுபடை வீடுகளின் மாதிரி முருகன் சிலைகளுக்கு தனித்தனியாக மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டுத் தரிசித்து மகிழ்ந்தனர்.