முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள், விமர்சனங்கள் எழுந்த போதும் இந்து இயக்கத் தொண்டர்கள் இரவு பகல் பாராது உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு இந்து வழக்கறிஞர்கள் சட்டரீதியாகப் போராடி தடைகள் நீங்கப் பாடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த போற்றுதலுக்குரிய 380 துறவிகள் மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பலவித சிரமங்களுக்கிடையிலும் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பித்த லட்சோப லட்சம் இந்து குடும்ப சொந்தங்களுக்கு அவர் நன்றி எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், நாத்திகம் என்பது வேறு இந்து விரோதம் என்பது வேறு என்பதைத் தெள்ளத் தெளிவாக மாநாடு எடுத்துக்கூறிப் புரிய வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்துக்களின் நம்பிக்கைகளை அநாகரிகமாகப் பேசினால் எதிர்க்கவும் இந்து முன்னணி தயங்காது எனவும் அறிக்கையில் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.