இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல இன்னல்களைத் தாண்டி, பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டது. 28 மணிநேர பயணத்திற்குப் பிறகு, நாளை மாலை 4.30 மணிக்குச் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இந்த குழு 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகளை தன்னுடன் சுபான்ஷு சுக்லா சுமந்து செல்வதாகவும் புகழாரம் சூட்டினார். சுபான்ஷு மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.