காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம் எனவும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.