மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக, 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சாலை விரிவாக்கப் பணிக்காக 477 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தது.
அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடுவது என்ற அடிப்படையில் 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் முழுமையாக நடப்படுவதை நெடுஞ்சாலைத்துறை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தின் பூர்வீக மர வகைகளான வேம்பு, புளி, புங்கன், கடம்பா, நாவல், மகிளம் ஆகிய மரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.