விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது என்ற உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தபோது தண்ணீர் லாரி மோதி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது எனச் சென்னை காவல் ஆணையர் அருண் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பதை விட, நேர அளவு ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.