இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.
ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் புதன்கிழமை மதியம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் அவர்களது விண்கலம் சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, 400 கிலோ மீட்டர் தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
Docking பணிகள் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த சுபன்ஷூ சுக்லாவை, அங்கு ஏற்கனவே உள்ள விஞ்ஞானிகள் ‘Welcome Drink’ வழங்கி வரவேற்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சுபன்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில், 2 வாரங்கள் தங்கியிருந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். புவி ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ள விண்வெளி சூழலில் பச்சைப்பயிறு, வெந்தயம் ஆகிய விதைகளை வளர்த்து சுபன்ஷூ சுக்லா ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
விண்வெளி மையத்துக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, குழுவினர் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, விண்வெளிக்கு தான் வந்துள்ளது அற்புதமான உணர்வு எனவும், விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் பாக்கியசாலிகளில் தானும் ஒருவராக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறினார். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே சுபன்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்குள் சென்றதை அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் மல்க நேரலையில் கண்டுகளித்தனர்.