சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை நந்தனம் எஸ்.எம் நகரில் உள்ள ஜெவிஎல் பிளாஸா என்ற வணிக வளாகத்தில் ஆயுஷ் ஹெல்த் கேர் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் போலியாக டெலிகாலிங் அலுவலகம் அமைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி டெலிகாலிங் நிறுவனம் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு, இன்சூரன்ஸ் போட்டு கொடுப்பதாகக் கூறி செல்போனுக்கு லிங்க் அனுப்பி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நிறுவன உரிமையாளரான பெரும்பாக்கத்தைச் சேர்ந்த முனீர் உசேன், மேலாளர் அசோக் குமார், HR அகமது உசேன் உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.