போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரியின் சொந்த வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
புதுக்கோட்டை மாநகராட்சியில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் கீழ ராஜ வீதியில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு கார் ஒன்று நோ பார்க்கிங் பகுதியில் நின்றுள்ளது.
இதனால், கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் அமர்ந்திருந்த ஓட்டுநரிடம், வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு பலமுறைக் கூறியும் செவிசாய்க்காததால், போக்குவரத்து போலீசாருக்குப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பெண் காவலர், சொகுசு காருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்பட்ட ஓட்டுநரைக் கண்டித்தது மட்டுமல்லாமல், கடமை உணர்வுடன் செயல்பட்ட பெண் காவல் அதிகாரியைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.