ஒசூரில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் தலைமுறைத் தலைமுறையாக வசித்து வந்த வீடுகளை மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அகற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்று இடம் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்சம் ஆகும் எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் முதல் இராக்கோட்டை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சாலைவிரிவாக்கத்திற்காக மரங்களோடு அப்பகுதியில் இருந்த 200க்கும் அதிகமான குடியிருப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமோ பாறைகள் இருக்கும் இடமாக அமைந்திருக்கிறது.
அரசு ஒதுக்கியிருக்கும் மாற்று இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் நிலையில், அதற்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவது என்பது இயலாத காரியம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றன. மாவட்ட நிர்வாகமோ இதுவரை மாற்று இடம் வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது.
குடியிருப்புகளை இழந்த அனைவரும் கூலி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் என்பதோடு, தற்போது மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியிருக்கும் இடத்தில் வீடுகட்டுவதற்குப் பணமில்லாமல் சிரமப்படக்கூடியவர்களாகவும் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத தங்களைப் பாறைகளை மிகுந்த பகுதியில் குடியிருக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்றாக மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.