தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் நீரில் அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று விழுந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் பயத்தில் அங்குமிங்கும் ஓடினர்.
பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர், உடும்பை லாவகமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.