முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். “ரூல்கர்வ்” என்ற விதிமுறைப்படி ஜூன் 30ம் தேதி மட்டுமே அணையில் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் முதற்கட்டமாக உபரிநீரை திறக்க தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை கேரள அரசுக்கு அனுப்பிய நீர்வளத்துறை இரவு நேரங்களில் தண்ணீர் திறக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளது. இதற்கிடையே ரூல்கர்வ் முறையை தமிழக அரசு நீக்க வேண்டும் எனவும், அது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய விவசாயிகள் அணையில் நீர்மட்டம் உயர்வதையும் உபரிநீர் திறப்பதையும் கேரள அரசு தவறாக சித்தரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே ரூல்கர்வ் முறையை கைவிட்டு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்வதை அனுமதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.