மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரூ. 1,76,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி திகார் ஜெயிலில் இருந்த ஆ.ராசா அரசியல் நாகரீகம் அற்ற முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
தற்போதும் அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள்.அருவருப்பான முறையில் பொது வெளியில் பேசுவதை ஆ ராசா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆக செயல்பட்டவர் தரம் தாழ்ந்து மற்ற தலைவர்களை பேசுவது எந்த வகையில் நியாயம்..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது – கண்டிக்கத்தக்கது என்றும், நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்ற சர்வாதிகார போக்கை திமுக கடைப்பிடிக்கிறதா..? என்றும் அவர் வினவியுள்ளார்.
அரசியலில் என்ன பேசுவது என்ற வரைமுறை அற்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளை திமுக கடைபிடிக்கிறதா ..? எனறும், எல்லோருமே பதிலுக்கு பதில் பேசினால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் ..? ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவது மக்களிடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும். என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் ஆ ராசா போன்றவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும், இது போன்ற அறிவற்ற வகையில் பேசுவதை தட்டி கேட்கும் வகையிலும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை பெருங் கோட்டத்தில்.. பிரிக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களில் 7 இடங்களில், தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அராஜக போக்கை தொடர்ந்து திமுக வெளிப்படுத்தினால் பாஜக தொடர் போராட்டத்தை நடத்தும் என்றும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.