விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் தொடங்கும் நிலையில், கோப்பையை வெல்லப் போவது யார் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 128 வீரர்கள் களம் இறங்குகின்றனர். நம்பர் ஒன் வீரரான ஜானிக் சினெர், நடப்பு சாம்பியனான கார்லஸ் அல்காரஸ், ஒலிம்பிக் சாம்பியனான ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போலப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா, ஜெசிகா பெகுலா உள்ளிட்டோருக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகையாக 627 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் கூடுதலாகும்.
இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா 35 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு 18 கோடி ரூபாயும் வழங்கப்படும்.
முதல் சுற்றில் தோற்றால்கூட 77 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும். இந்த டென்னிஸ் திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கவுள்ள நிலையில் பட்டங்களை வெல்லப்போவது யார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.