தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்ததால் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மேடு பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாயொன்று சாலையில் செல்வோரைக் கடித்துக் குதறியது. இதில் சிறுவர்கள் உட்படப் படுகாயமடைந்த 8 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாயொன்றை ஆனந்த் என்பவர் வளர்த்து வருகிறார். இவர் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, அந்த நாய், சாலையில் உள்ள மற்ற நாய்களையும், பொதுமக்களையும் கடித்துக் குதறியது.