சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினார்.
மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தாயார் மாலதி, சகோதரர் நவீன் குமாரிடம் வழக்கு விசாரணை குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வழக்கில் காவல்துறை சம்மந்தப்பட்டிருப்பதால், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டுமெனத் தெரிவித்தார்.
உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.