தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை வரும் 31 வரை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கப்பலூர், எட்டூர் வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகள் இயக்கியதற்காக 276 கோடி ரூபாய் சுங்க கட்டணம் பாக்கி உள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஜூலை 10ம் தேதி முதல் அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி அரசுத்தரப்பில் முன் வைக்கக் கோரிய முறையீட்டை ஏற்ற நீதிபதி, இந்த வழக்குகளை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரச்சனைக்குத் தீர்வு காணச் சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 ஆம் தேதி வரைக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.