முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்தார்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெளிநாடு செல்ல அனுமதியளித்தால் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அசோக்குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்கா செல்ல உள்ளதால், அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அசோக்குமாரை அமெரிக்கா செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.