திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியபோது அமலாக்கத்துறை ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும், இன்னும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல எனக் கூறினர்.
ஒரு மனுவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அபராத தொகையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்குச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.