நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500-க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
37,000 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலமாக இயக்கப்படவுள்ளன. இதன் மூலமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் புதிய சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நாட்டில் இதுவரை இணைய இணைப்பு கிடைக்காத 26,700-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 4ஜி சேவை மூலமாக இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில் ஒடிசாவில் 2,472 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படவுள்ளது.
அவற்றில் பல கிராமங்கள் தொலைதூரங்களிலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.