அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அம் மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா, தென்மேற்கு பருவமழை வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக கூறினார்.
அதேசமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசுவதாகவும் இதனால் தமிழகம், புதுச்சேரியில் வரும் 18ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்முறை வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.