பண்டைய வேத அறிவையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து வழங்கப்படும் கல்வி, இந்திய ஞான மரபை நவீன சூழலில் முன்னெடுத்துச் செல்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் குடியரசுத் தலைவருக்கு பாபா ராம்தேவ் துர்கா தேவி உருவ சிலையை பரிசாக வழங்கினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய குடியரசு தலைவ சகோதரத்துவம், பண்டைய வேத அறிவையும், நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காணுதல் ஆகிய நோக்கங்களுடன் வழங்கப்படும் கல்வி, இந்திய ஞான மரபை நவீன சூழலில் முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டார்.
மேலும், பதஞ்சலி பல்கலைக்கழகம் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பாபா ராம்தேவின் இந்த மகத்தான பாரம்பரியத்தை சமுதாயத்திற்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தைக் கட்டமைக்கும் பாதையை பதஞ்சலி பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தினார்.
















