பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முதலே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் களைகட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து 21 வகையான பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு, குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு வேடந்தாங்கல் பகுதியில் கனமழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இதன் காரணமாகச் சரணாலயம் முழுவதும் பறவைகள் நிறைந்து காட்சியளிக்கிறது.
இந்தப் பறவைகளைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதால் சீசன் களைகட்டியுள்ளது.
சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
















