மசோதா மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வரம்பு நிர்ணயித்துத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புகுறித்து 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.
குடியரசு தலைவரின் கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவித்தார்.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுத் தீர்ப்பு அளித்தது.
அதில், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன என்றும், ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம், ஆனால் நான்காவது வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தனர்.
ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது என்றும், அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்கத் தேவையில்லை எனக்கூறிய நீதிபதிகள், வேண்டுமென்றால் மசோதா மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
















