இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 60வது முறையாக இருநாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதாகத் தற்பெருமையாகக் கூறியுள்ளார். இந்த முறை என்ன பேசினார்? எங்குப் பேசினார்? என்று இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் மாதம் ஐநா சபையின் 80வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலகளவில் முடிவில்லாத போர் என்று கருதப்பட்ட 7 போர்களை 7 மாதங்களில் நிறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசை தமக்க வழங்க வேண்டும் என்று பலர் கூறுவதாகவும், ஆனால் போர் இல்லாத உலகில் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் அரவணைப்பில் வளருவதை மட்டுமே உண்மையான பரிசாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கடந்த மே மாதம், இந்தியா- பாகிஸ்தான் இடையே நீடித்த போரை விடிய விடிய இரவு முழுவதும் மத்தியஸ்தம் செய்து முடிவுக்குக் கொண்டுவந்ததாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவூதி முதலீட்டு மன்றத்தில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், கூச்சமே இல்லாமல் 60வது முறையாக இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் அணு ஆயுதப் போராக மாறும் சூழலில் தாம் தலையிட்டு, போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்கும் 350 சதவீதம் வரி விதிப்பதாகவும், இருநாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய நிரந்தர தடை விதிப்பதாக மிரட்டியதாகவும், வரிக்குப் பயந்து இருநாட்டுத் தலைவர்களும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் இருநாடுகளுக்கும் 350 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டதாகவும், உடனே பிரதமர் மோடி தம்மை தொடர்பு கொண்டு போரை நிறுத்தி விட்டதாகத் தெரிவித்தார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, வெள்ளைமாளிகையில் சவூதியின் பட்டத்து இளவரசருடனான இருதரப்பு சந்திப்பின் போதும் இதே கருத்தை ட்ரம்ப் கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரு நாட்டு DGMOக்கள் இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.
எந்த நாட்டின் தலைவரும் இந்தியாவிடம் ஆப்ரேஷன் சிந்தூரைநிறுத்தச் சொல்லவில்லை என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளார். மேலும், பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
















