எத்தியோப்பிய எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல், இந்தியாவை நோக்கி 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை கடந்த 23ஆம் தேதி வெடித்தது.
பல மணி நேரமாக எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பல், மேகங்களை புகைமண்டலமாகச் சூழ்ந்தது.
இந்த சாம்பல் சூழ் மேகங்கள் குஜராத்தின் மேற்கு பக்கத்தில் நுழைந்து ராஜஸ்தான், வடமேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் இமயலை மற்றும் பிற பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவை நோக்கி மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சாம்பல் நகர்ந்து வருகிறது என்றும், இது 25 ஆயிரம் அடி முதல் 45 ஆயிரம் அடி உயரத்தில் பயணிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்குள் இந்தியாவை எரிமலை சாம்பல் வந்தடையும் என்றும், இதனால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, எரிமலை சாம்பலால் மத்திய கிழக்கு பாதையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாதையை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலைமை சீராகும் வரை விமான நிலையங்கள் கவனமுடன் விமான போக்குவரத்தை கையாளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
















