சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சென்னையை அடுத்த ஆவடியில், விசிக சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது திடீரென மேடை ஏறிய பெண், பிரபாகரன் உயிரோடு இருக்கும் நிலையில், மாலை அணிவித்தது ஏன் என்று கேட்டதோடு ஒருமையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விசிக-வினர் அந்தப்பெண்ணை வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து இறக்கி, தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
காவல்துறையினர் பத்திரமாக அப்பெண்ணை மீட்ட நிலையில், விசிக பெண் நிர்வாகி ஒருவர் அந்த பெண்ணை முதுகில் தாக்கினார். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து விட்டு, அப்பெண்ணை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
















