மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மூத்த நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
இதனை அடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.
















