கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நேரில் ஆஜரான கனிமவள துறையின் ஆணையர் மோகனிடம், தமிழ்நாட்டில் தொடரும் கனிம வள கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், கனிம வளங்களை எடுப்பதற்கு ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும், கனிவளங்களை சட்ட விரோதமாக கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
கனிம வள கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால் கனிம வள திருட்டை தடுக்கவே முடியாது எனவும் தெரிவித்தனர்.
கனிமவள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய நீதிபதிகள், கனிம வள கொள்ளையை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அடுத்த வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கனிம வள துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
















