கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள ஆயிரத்து 200 உள்ளாட்சி அமைப்புகளில், ஆயிரத்து 199 அமைப்புகளுக்குக் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிப் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைபற்றிய நிலையில், ஆளும் இடது சாரிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் LDF 29 வார்டுகளிலும், UDF 19 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சாஸ்தாமங்கலம் கோட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, கிறிஸ்தவர்கள், வக்பு வாரியம் இடையே பிரச்னைக்குரிய இடமாகப் பார்க்கப்பட்ட முனம்பம் பகுதியில், NDA கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலமாக, கேரளாவில் முதன்முறையாக மாநகராட்சியைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தல் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
UDF, LDF ஆகியவற்றால் கேரள மக்கள் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்துள்ள வெற்றியானது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், கேரள மக்களுக்கு நல்லாட்சி வழங்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.
















