முதலீடு செய்பவர்களுக்கு இந்தியா பல வாய்ப்புகளை வழங்குவதாக ஜோர்டானிய முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், பிரதமர் மோடியை அவர் காரில் அருட்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடிக்கு ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிச் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்வள மேலாண்மை, பெட்ரா-எல்லோரா இணைப்பு ஒப்பந்தம், கலாச்சாரப் பரிமாற்ற திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா – ஜோர்டான் தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவாகப்போவதாகவும், இந்த வளர்ச்சியில் ஜோர்டான் நிறுவனங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
ஜோர்டானில் உள்ள இந்திய நிறுவனங்களால் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முடியும் என்றும் இதன்மூலம், ஜோர்டான் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.
மேலும், மேற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பகமான மையமாக ஜோர்டான் உருவாக முடியும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
















