இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி கட்சிகள் செய்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரியும், திமுக அரசைக் கண்டித்தும், இந்து முன்னணி சார்பாக, புதுச்சேரி திருமங்கலம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருமடம், ஸ்ரீலஸ்ரீ கணேச தேசிக சாமிகள் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தீபப் போராட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையில், தர்கா அமைந்திருக்கும் இடம், படிக்கட்டு மற்றும் நெல்லித்தோப்பு பகுதி தவிர, மலை முழுவதும் முருகனுக்குச் சொந்தம், திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தம் என்று, 1920 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்திலேயே தீர்ப்பு கொடுக்கப்பட்டு, வெவ்வேறு காலகட்டத்தில் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் அமைந்திருக்கும் பகுதி, கோவிலுக்குச் சொந்தமானது. இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த டிசம்பர் 1, 2025 அன்று தீர்ப்பளித்தது என குறிப்பிட்டார்
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தர்கா சார்பாக யாரும் வழக்கு தொடரவில்லை. ஆனால், ஆலய வழிபாட்டு முறைகளை உறுதி செய்ய வேண்டிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது என்றும் அவர் கூறினார்.
அது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. G.R.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் உட்பட, 100 இண்டி கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களது உண்மையான நோக்கம் இந்து மத எதிர்ப்பு மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில், விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. இந்து சமய வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால், இந்தி கூட்டணிக் கட்சிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். தேர்தல் வரும்போது, இந்த துரோகக் கூட்டம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
















