டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்த விசாரணையில், வழக்குகளை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை நியாயமாக விசாரிக்காது என்பதால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டும், மனுதாரர் தரப்பில் இதுவரை சேர்க்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 22 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















