ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட DHRUV-64 MICRO PROCESSOR CHIPSET-ஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு வளர்ச்சிக்கான முக்கிய மைல்கல் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
இந்தியாவை பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில், தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், “ஆத்மநிர்பர் பாரத்” என்ற ஒரு விரிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. வெளிநாட்டு சார்பை குறைத்து, சொந்த நாட்டிலேயே உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காக உள்ளது. MAKE IN INDIA, DIGITAL INDIA, STARTUP INDIA போன்ற முயற்சிகளுடன் இணைந்து, சிறு-நடுத்தர தொழில்கள், ஸ்டார்ட் அப்கள், உள்ளூர் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றிற்கும் இந்தத் திட்டம் ஆதரவு வழங்குகிறது.
இதன் மூலம், இந்தியா உலகளாவிய போட்டியில் தனது இடத்தை வலுப்படுத்தி, நீடித்த வளர்ச்சியுடன் ஒரு வலுவான, தன்னம்பிக்கையான நாடாக மாறும் என்பதை ஆத்மநிர்பர் பாரத் திட்டம் எடுத்துரைக்கிறது. இதற்கிடையே இந்தியா “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையாக நாட்டிலேயே உருவாக்கப்பட்ட “DHRUV-64” என்ற புதிய MICRO PROCESSOR CHIPSET-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 5G உட்கட்டமைப்பு, வாகன தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், தொழிற்துறை தானியக்கம் மற்றும் INTERNET OF THINGS போன்ற பல துறைகளில் இந்த CHIPSET பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MICRO PROCESSOR என்பது ஸ்மார்ட்போன், கணினி, ஸ்மார்ட் டிவி, வாஷிங் மிஷின், கார்கள், மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு அமைப்புகள், விண்வெளியில் செயல்படும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அனைத்து நவீன மின்னணு சாதங்களின் மூளையாகச் செயல்படுகின்றன. ஒரு CHIPSET-ன் கட்டமைப்பில் இருந்து அதன் உற்பத்திவரை மிகுந்த தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்ட இந்தத் துறை, உலகளவில் சில வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ள காப்புரிமை தொழில்நுட்பங்களை சார்ந்துள்ளது.
இதன் விளைவாக CHIPSET-கள் மிக விலை உயர்ந்தவையாகவும், இந்தியாவின் சிறிய நிறுவனங்களுக்கு எளிதாகக் கிடைக்காதவையாகவும் இருந்து வருகின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த MICRO PROCESSOR-களில் சுமார் 20 சதவீதத்தை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், இந்திய தொழில்நுட்ப ஸ்டாப்ட் அப்கள் மற்றும் சிறு-நடுத்தர மின்னணு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையமான C-DAC (Centre for Development of Advanced Computing), முழுமையாக நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை DHRUV-64 CHIPSET-ஐ அறிமுகம் செய்துள்ளது.
64-BIT கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 2 CORE MICRO PROCESSOR ஆன DHRUV-64, அதிகபட்சமாக 1.0 GIGA HERTZ வேகத்தில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயலிகளை சாராமல் உள்நாட்டிலேயே கணினி சார்ந்த தயாரிப்புகளை உருவாக்க, சோதிக்க மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய ஏதுவாக, ஸ்டார்ட் அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இந்த CHIPSET-கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், DHRUV-64 MICRO PROCESSOR-ஐ இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவுக்கான முக்கியமான மைல்கல் எனப் பிரதமர் மோடி பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட DHRUV-64 CHIPSET, வெளிநாட்டு தொழில்நுட்ப சார்பை குறைத்து, “ஆத்மநிர்பர் பாரத்” மற்றும் “MAKE IN INDIA” கனவுகளை நடைமுறைப்படுத்த உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் திறனை இந்த முயற்சி வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 5G, வாகன தொழில்நுட்பம், தொழிற்துறை தானியக்கம் போன்ற எதிர்காலத் துறைகளில் இந்தியாவை உலகளாவிய போட்டியில் முன்னணிக்கு கொண்டு செல்லும் வலிமை இதற்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் DHRUV-64 இந்தியாவின் புதுமை, அறிவியல் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம் என்றும் தனது பதிவில் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதற்கு முன்பாகவும் இந்திய அரசு மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் இணைந்து பல CHIPSET-களை உருவாக்கியுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு IIT MADRAS உருவாக்கிய SHAKTHI CHIPSET, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மூலோபாய பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. அதே ஆண்டில், IIT BOMBAY உருவாக்கிய AJITH CHIPSET, தொழில்துறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ISRO மற்றும் SCL இணைந்து உருவாக்கிய VIKRAM CHIPSET, விண்வெளி நிலைகளின் கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதேபோல, C-DAC உருவாக்கிய TEJAS-64 தொழிற்துறை தானியக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலில், தற்போதைய DHRUV-64 அறிமுகத்துடன், அடுத்த தலைமுறை DHANUSH மற்றும் DHANUSH + செயலிகளை உருவாக்கும் பணிகளையும் C-DAC தொடங்கியுள்ளது.
இதனுடன் நாட்டிலேயே CHIPSET உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிஜிட்டல் இந்தியா RISC-V திட்டத்தின் மூலம், இந்தியாவில் சிலிக்கான் வடிவமைப்பு, சோதனை மற்றும் மாதிரி தயாரிப்புகளுக்குத் தேவையான ஆதரவையும் அரசு வழங்கி வருகிறது.
மொத்தத்தில், DHRUV-64 MICRO PROCESSOR அறிமுகம் என்பது ஒரு தனிப்பட்ட தொழில்நுட்ப சாதனையாக மட்டுமல்லாமல், இந்தியாவின் நீண்டகால தொழில்நுட்ப தன்னிறைவுக்கான பயணத்தில் ஒரு முக்கியமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலேயே வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றை வலுப்படுத்தும் இந்த முயற்சி, இந்திய ஸ்டார்ட் அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உலகளாவிய தொழில்நுட்ப போட்டியில் இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















