திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தீபத்தை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த 2 வாரங்களுக்கு மேலாகத் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்லப் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், திருப்பரங்குன்றம் மலையின் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் கொடியேற்ற நிகழ்வை நடத்தினர்.
இதையடுத்து, தங்களையும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி 15க்கும் மேற்பட்ட இந்து சமூக மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
கோயிலுக்குச் செல்பவர்கள், பக்தர்கள் தங்கள் ஆதார் எண், செல்போன் எண்ணைப் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் வீடியோ, புகைப்படம் எடுக்கவும் தடை விதித்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
















