கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ஸ்லீப்பர் பேருந்து, அதிகாலை 2.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பை தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. இதனால் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பேருந்திலிருந்த 32 பயணிகளில் சுமார் 21 பேர் காயமடைந்தனர். பின்னர் பலி எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து 17ஆக அதிகரித்தது. இது மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
















