வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் மீதே திமுக அரசு குற்றஞ்சாட்டி வருவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று, இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள.
இந்த விவகாரம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான தனிநபர் ஆணையமும், பட்டியலின ஆணையமும் விசாரணை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், புகார் தெரிவிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த காவலர் முரளிராஜா உட்பட 3 பேர் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனிடையே, குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேங்கைவயல் விவகாரத்தால் கடந்த மக்களவைத் தேர்தலை ஒரு தரப்பினர் புறக்கணித்ததால், குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் வேங்கைவயல் விவகாரம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேள்வி எழுந்துள்ளது.
















