வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியின் கிளையில் விதிகளை மீறி 5 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி நடந்தது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன இயக்குநர்கள் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.பி.வடிவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய வங்கி மூத்த மேளாலர், மதிப்பீட்டாளர், தனியார் நிறுவன இயக்குநர் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகள் உட்பட 3 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
















